30/05/2026
நிச்சயமற்ற சர்வதேச சூழலுக்கு மத்தியிலும் 2026ன் 1வது காலாண்டில் ரூபா 16.6 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தை மக்கள் வங்கி ஈட்டியுள்ளது, குழுமத்தின் சொத்துக்கள் ரூபா 4.2 டிரில்லியனை எட்டியுள்ளன
• மக்கள் வங்கி தனித்த அடிப்படையில் 2026ன் 1வது காலாண்டில் ரூபா 16.6 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தைப் பதிவாக்கியுள்ளமை, நிச்சயமற்ற சர்வதேச சூழலுக்கு மத்தியில் அதன் மீள்தன்மையைப் பிரதிபலிக்கின்றது
• சொத்துத் தரம் மேம்பட்டுள்ளதுடன், நிலை 3 விகிதம் 7.2% ஆகவும், நிலை 3 ஒதுக்கீட்டு ஒதுக்கல் காப்பீடு 50.0% வரையும் குறைவடைந்துள்ளன.
• ரூபா 25.0 பில்லியன் தொகை அடுக்கு 2 தொகுதிக்கடன் பத்திர வழங்கல் மூலமாக மூலதனம் மற்றும் திரவத்தன்மை ஆகியன வலுப்பெற்றுள்ளதுடன், CAR ஆனது 17.9% ஆக மேம்பட்டு, 260.0% ரூபா LCR ஐப் பேணியுள்ளது.
• வரிகள் மூலமாக ரூபா 11.9 பில்லியன் தொகையையும், “இலங்கையை மீளக் கட்டியெழுப்பல்” நிதியத்திற்கு ரூபா 300.0 மில்லியன் நன்கொடையையும் வழங்கி, தேசத்திற்கான தனது தொடர்ச்சியான பங்களிப்பை எடுத்துக்காட்டியுள்ளது.
வங்கி மட்டத்திலான பெறுபேறுகளின் முக்கிய அம்சங்கள்
2026 மார்ச் 31ல் முடிவடைந்த காலாண்டில் வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட நிதியியல் பெறுபேறுகளைப் பதிவாக்கியுள்ள மக்கள் வங்கி, அதிகரித்துச் செல்லும் பூகோள அரசியல் நெருக்கடிகள் மற்றும் தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற சர்வதேச பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் உறுதிப்பாட்டைப் பேணியுள்ளது. வங்கி இக்காலப்பகுதியில் தனித்த அடிப்படையில் ரூபா 16.6 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தைப் பதிவாக்கி, அதன் உள்ளார்ந்த அடிப்படை அத்திவாரங்களின் வலிமை, விவேகமான ஐந்தொகை முகாமைத்துவம், மற்றும் ஒழுக்கமான இடர் முகாமைத்துவச் செயற்பாடுகளைப் பிரதிபலிக்கச் செய்துள்ளது.
பிரதான வருமான மார்க்கங்கள் மத்தியில் தொடர்ச்சியான வளர்ச்சியின் துணையுடன், வங்கி சிறப்பான தொழிற்பாட்டுப் பெறுபேறுகளைப் பதிவாக்கியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாக்கப்பட்ட ரூபா 40.7 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் மொத்த தொழிற்பாட்டு வருமானம் 13.2% ஆல் அதிகரித்து ரூபா 46.1 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. தேறிய வட்டி வருமானம் ரூபா 34.1 பில்லியனிலிருந்து 17.5% ஆல் அதிகரித்து, ரூபா 40.1 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. திறன்மிக்க மீள்விலையிடல் தந்திரோபாயங்கள் மற்றும் ஒழுக்கமான சொத்து-பொறுப்பு முகாமைத்துவம் ஆகியவற்றின் துணையுடன் தேறிய வட்டி இலாப வரம்பு 4.1% இலிருந்து 4.3% ஆக அதிகரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இலாப வரம்பும் ஒட்டுமொத்த பெறுபேறுகளுக்கு உதவியுள்ளன.
வங்கியின் ஐந்தொகை தொடர்ந்தும் சீரான அதிகரிப்பையும், நிதியியல் உறுதிப்பாட்டையும் காண்பித்துள்ளது. மொத்த சொத்துக்கள் ரூபா 3.8 டிரில்லியனையும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் ரூபா 3.3 டிரில்லியனாகவும் அதிகரித்துள்ளன. நிகர கடன்கள் மற்றும் முற்பணத் தொகை ரூபா 1.8 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கையின் மிகப் பாரிய பாசல் III இணக்கப்பாடு அடுக்கு 2 கடன் பத்திர வழங்கல் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்ததன் மூலமாக ரூபா 25.0 பில்லியன் தொகையைத் திரட்டி, தனது மூலதன நிலையமைப்பையும் வங்கி மேலும் வலுப்படுத்தியுள்ளது. வங்கியின் நீண்ட கால உறுதிப்பாடு மற்றும் நிதியியல் வலிமை ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கின்றது.
வலுப்படுத்தப்பட்ட மூலதனத் தளமானது வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் மேலும் மேம்படுவதற்குப் பங்களித்துள்ளதுடன், 2025ன் முடிவில் பதிவாக்கப்பட்ட 16.5% இலிருந்து 17.9% ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தும் ஒழுங்குமுறை தேவைப்பாடுகளை விட சிறப்பான மட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வலுவான திரவத்தன்மை மட்டத்தையும் வங்கி பேணியுள்ளதுடன், ரூபா திரவத்தன்மை காப்பு விகிதத்தை 260.0% ஆகப் பேணி, தனது வலுவான நிதியியல் மீள்திறனை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
வங்கியின் நிதியியல் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சொத்துத் தரம் தொடர்பான குறிகாட்டிகள் இக்காலாண்டில் தொடர்ந்தும் மேம்பட்டுள்ளன. மதிப்பிறக்க கடன்களின் (நிலை 3) விகிதம் 7.7% இலிருந்து 7.2% ஆக மேம்பட்டுள்ளதுடன், நிலை 3 ஒதுக்கீட்டுக் காப்பு விகிதம் 48.4% இலிருந்து 50.0% ஆக வலுவடைந்துள்ளமை மேம்பட்ட மீள் அறவீட்டு முயற்சிகள் மற்றும் விவேகமான கடன் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
குழும மட்டத்திலான பெறுபேறுகள்
குழும மட்டத்தில், காத்திரமான பிரதான வங்கிச்சேவை விரிவாக்கம் மற்றும் மேம்பட்ட இலாப வரம்புப் பெறுபேறுகளின் துணையுடன், தனது வலுவான வளர்ச்சி உத்வேகத்தை இக்காலாண்டிலும் வங்கி தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாக்கப்பட்ட ரூபா 17.7 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில், ரூபா 20.0 பில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்தை குழுமம் பதிவாக்கியுள்ளது. மேம்பட்ட தொழிற்பாட்டுப் பெறுபேறுகள் மற்றும் ஒழுக்கமான செலவு மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றின் துணையுடன் 13.5% வளர்ச்சியை இதன் மூலமாகப் பிரதிபலிக்கச் செய்துள்ளது.
குழுமத்தின் ஐந்தொகை தொடர்ந்தும் சீராக வளர்ச்சி கண்டுள்ளதுடன், மொத்த சொத்துக்கள் ரூபா 4.2 டிரில்லியனை எட்டியுள்ள அதேசமயம், நிகர கடன்கள் ரூபா 2.1 டிரில்லியனாக மேம்பட்டுள்ளது. இது முக்கியமான பிரிவுகள் மத்தியில் குழுமத்தின் வலுப்படுத்தப்பட்ட அளவு மற்றும் வணிக அதிகரிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. தேறிய வட்டி வருமானம் ரூபா 38.6 பில்லியனிலிருந்து, ரூபா 47.4 பில்லியனாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன், திறன்மிக்க ஐந்தொகை மீள் மதிப்பு நிர்ணயம் மற்றும் நிலையான கடன் செயற்பாடுகளின் துணையுடன் 22.9% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது.
தேறிய வட்டி வரம்பிலும் மேம்பாட்டை குழுமம் பதிவாக்கியுள்ளது. இது 4.4% இலிருந்து 4.6% ஆக அதிகரித்துள்ளதுடன், திறன்மிக்க சொத்து-பொறுப்பு முகாமைத்துவம் மற்றும் மேம்பட்ட வட்டி வருமானச் சொத்துக்களின் வருமானங்களைப் பிரதிபலிக்கின்றது. ஒட்டுமொத்தத்தில், இக்காலாண்டில் வலுவான தொழிற்பாட்டு உத்வேகம் மற்றும் நிதியியல் மீள்திறன் ஆகியவற்றை குழுமம் பேணியுள்ளதுடன், நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்று என்ற தனது ஸ்தானத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தலைமைத்துவத்தின் கருத்துக்கள்
2026ன் 1வது காலாண்டு பெறுபேறுகள் குறித்து தலைவர், பேராசிரியர் நாரத பெர்னாண்டோ அவர்கள் கருத்து வெளியிடுகையில் இப்பெறுபேறுகள் 2026 மார்ச் 31ல் முடிவடைந்த காலாண்டில் அதிகரித்துள்ள பூகோள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மக்கள் வங்கியின் தொடர்ச்சியான மீள்திறனையும், உறுதிப்பாட்டையும் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். வங்கியின் பெறுபேறுகள் அதன் வலுவான அடிப்படைகள், விவேகமான நிர்வாகக் கட்டமைப்பு, மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான ஒழுக்கமான அணுகுமுறை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவும், அவை உறுதிப்பாட்டை பேணுவதற்கு இடமளித்துள்ள அதேசமயம், முக்கிய நிதியியல் குறிகாட்டிகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்தல், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் அபிவிருத்தி, மற்றும் பரந்த பொருளாதார மீட்சிக்கான முயற்சிகள் உள்ளிட்ட தேசிய பொருளாதார முன்னுரிமைகளுக்கு உதவுவதில் வங்கியின் முக்கியமான பங்கினை அவர் சுட்டிக்காட்டியதுடன், நிலையான தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதில் முக்கிய நிறுவனம் என்ற அதன் ஸ்தானத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் இக்காலாண்டின் பெறுபேறுகளை வங்கியின் தொழிற்பாட்டு மீள்திறன் மற்றும் நிதியியல் வலிமை ஆகியவற்றை வலுவாக வெளிக்காண்பித்துள்ளதாக குறிப்பிட்டார். வங்கியின் வலுவான பிரதான வருமான ஈட்டல்கள், மேம்பட்ட இலாப மட்டங்கள், மேம்பட்ட சொத்துத் தர குறிக்காட்டிகள், மற்றும் தொடர்ச்சியான ஐந்தொகை மேம்பாடு ஆகியன அதிகரித்து வருகின்ற சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சவால்களுக்கு மத்தியிலும் அதன் நிதியியல் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ரூபா 25.0 பில்லியன் பாசல் III இணக்கப்பாடு அடுக்கு 2 தொகுதிக்கடன் பத்திர வழங்கல் நடவடிக்கை மற்றும் வங்கியின் வலுவான மூலதன மற்றும் திரவத்தன்மை காப்பு மட்டங்கள் ஆகியன முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துச் செல்வதைப் பிரதிபலிப்பதுடன், வங்கியின் நீண்ட கால தந்திரோபாய ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் திரு. பொன்சேகா அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டார். டிஜிட்டல் வங்கிச்சேவை, வாடிக்கையாளர் அனுபவம், தொழிற்பாட்டுத் திறன், மற்றும் அனைவரையும் அரவணைக்கும் நிதித் தீர்வுகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொடர்ச்சியான முதலீடுகள் எதிர்வரும் காலங்களில் வங்கியின் போட்;டித்திறனை மேலும் வலுப்படுத்தி, நிலையான வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிதியியல் பெறுபேறுகளுக்கு அப்பால், இக்காலாண்டில் நாட்டின் பொருளதார மீட்சி மற்றும் சமூக அபிவிருத்தி முயற்சிகளுக்கும் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்த்தமுள்ள பங்களிப்புக்களை ஆற்றியுள்ளது. வரிகள் மூலமாக ரூபா 11.9 பில்லியன் தொகையை வங்கி அரசாங்கத்திற்குப் பங்களித்துள்ளதுடன், “இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்” நிதியத்துக்கும் ரூபா 300.0 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது. நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்தல், டிஜிட்டல் வங்கிச்சேவைகளை கைக்கொள்ளுதல், மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கான முயற்சிகள் ஆகியவற்றுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கி, இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பிக்கைமிக்க பங்காளராக சேவையாற்றுவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.